காட்டு யானைகளால் பாதிப்பை எதிர்கொண்டுள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து கல்விக்கான நிதியுதவி
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவது அன்றாட நிகழ்வாக மாறியிருப்பதால் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக
முன்னெடுத்துச் செல்வதற்கான ஊக்குவிப்பாக நிதியுதவியை வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகச் சபை தீர்மானித்துள்ளது.
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதால் பாதிக்கப்பட்ட, காயங்களுக்கு உள்ளாகியவர்கள் இருக்கின்ற குடும்பங்களுக்கு இதன்போது முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதால் சொத்துச் சேதங்களை எதிர்கொண்ட குடும்பங்களின் பிள்ளைகளும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
பிரதேச செயலாளரின் மேற்பார்வைக்கு அமைய நிதியுதவிக்கு தகுதியுடைய குடும்பமாக இருக்க வேண்டும் என்பதுடன், 1 ஆம் வகுப்பு தொடக்கம் க.பொ.த சாதாரண தரம் அல்லது க.பொ.த உயர்தரம் வரையில் கல்வி பயிலும் பிள்ளைகள் இருக்கின்ற குடும்பமாக இருப்பதும் இந்த நிதியுதவிக்கான தகுதியாக கருதப்படும்.
ஜனவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கு பின்னரான தினங்களில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைந்த காரணத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பமாக இருக்க வேண்டும் என்பதோடு, தற்போதும் ஜனாதிபதி நிதியத்தினால் செயற்படுத்தப்படும் க.பொ.த உயர்தர புலமைபரிசு வேலைத்திட்டத்தின் பயனாளியாக இல்லாதிருப்பதும் தகுதியாக கருத்தப்படும்.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக 1 ஆம் வகுப்பு முதல் 11 வரையில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட பிள்ளையொன்றுக்காக 3,000 அடிப்படையில் அதிகபட்சமாக 12 மாத காலத்திலற்கும், 12 மற்றும் 13 வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 5,000 அடிப்படையில் அதிகபட்சமாக 12 மாத காலத்திற்கும் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் நிதியுதவி வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி தமது பிரதேச செயலாளர் பிரிவுகளில் தகுதியை பூர்த்தி செய்த குடும்ப பிள்ளைகளின் தகவல்களை பெற்றுக்கொண்டு தமது தனிப்பட்ட மேற்பார்வை மற்றும் பரிந்துரையுடன் குறித்த விண்ணப்பங்களை தாமதமின்றி ஜனாதிபதி நிதியத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments