Vettri

Breaking News

இரண்டு கட்சிகளுக்கிடையே மோதல் சம்மாந்துறையில் சம்பவம் -உதுமான் கண்டு நாபீர் கண்டனம்...




 


பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்ட சம்மாந்துறை போலீஸ் பிரிவுக்குட்பட்ட நாய்க்குட்டியர்  சந்தி  அருகில் நேற்று இரவு (14) இரண்டு அரசியல் கட்சிகளுக்கிடையே மோதல் இடம் பெற்றுள்ளது. இது அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட முதலாவது வன்முறை சம்பவமாக கருதப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்கள் சிலர் தேசிய காங்கிரஸின் வேட்பாளரின் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த வேட்பாளரை தாக்கிவிட்டு பொருட்களையும் செதப்படுத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உட்பட்டு காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சம்மாந்துறை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவமானது பல அரசியல் கட்சிகள் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் பெரியதொரு அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.
நீண்டதொரு அரசியல் வரலாற்றை கொண்ட சம்மாந்துறை மண்ணில் இவ்வாறான புதிய கட்சிகளின் வருகையினால் இடம்பெறும் வன்முறை கலாச்சாரங்கள், மாமூல் அரசியல் கலாச்சாரங்கள் மற்றும் அரசியல் முகவர்கள் மூலம் வாக்குகளை பேரம் பேசும் அரசியல் கலாச்சாரம் உள்நுழைந்திருப்பது சம்மாந்துறை அரசியலுக்கு பாரிய இழுக்காகும் என்றும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் சம்மாந்துறை போலீசார் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகத் தலைவரும் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவருமான உதுமான் கண்டு நாபீர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் :

அரசு உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான சட்ட திட்டங்களை இறுக்கமாக கடைப்பிடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறான காடை தனமான அரசியல் கலாச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு வருவதனால் மக்களிடம் காணப்படுகின்ற ஜனநாயக தேர்தல் முன்னெடுப்புகள் அனைத்துமே குழிதோண்டி புதைக்கப்பட்டு வன்முறை அரசியல் கலாச்சாரத்தை விதைப்பதற்கு இவ்வாறான சம்பவங்கள் கால்கோள் அமைக்கின்றன. மக்கள் ஜனநாயக தேர்தலை எதிர்கொண்டு நேர்மையான அரசியல்வாதிகளை இனம்கண்டு அவர்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுப்பதற்கு இவ்வாறு சம்பவங்கள் தடையாக அமைகின்றன. மாமுல் அரசியல், வன்முறை அரசியல் மற்றும் அரசியல் முகவர்களின் ஊடாக வாக்குகளை பணங்களை கொடுத்து பேரம் பேசி பெற்றுக் கொள்கின்ற ஊழல் அரசியல் என்பவற்றை சமூகத்தில் கொண்டு வந்து விதைக்கின்றவர்கள் அல்லது பரப்புகின்றவர்கள் தொடர்பில் மக்கள் அவதாரத்துடன் இருந்து அவைகள் அனைத்தையும் புறந்தள்ளி நேர்மையான அரசியல் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட முறையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொண்டு வாக்களிக்க முன்வர வேண்டும்.

அரசியலில் பெரும் பெரும் தலைவர்களால் வழிநடத்தப்பட்ட சம்மாந்துறை சமூகம் இவ்வாறான ஈனத்தனமான வன்முறை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பயன்படுத்த வேண்டும். புதிய நேர்மையான அரசியல்வாதிகளுக்கு இடம் கொடுத்து ஊழல் அரசியல்வாதிகளை இதற்கு முன்னர் உள்ள தேர்தல்களில் வீட்டில் அமர வைத்தது போன்று இந்த தேர்தலையும் பயன்படுத்தி இவ்வாறானவர்களுக்கு சாவு மணி அடிக்க வேண்டும். சேவை மனப்பாங்கோடு மக்கள் மனதில் இடம் பிடித்து சேவையாளர்களையும் இளைஞர்களையும் நல்லவர்களையும் சமூகத்தின் முன்னால் தேர்தலில் தெரிவு செய்து அவர்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்புவதன் ஊடாக எதிர்கால அரசியலில் சிறந்த ஜனநாயகத்தை உருவாக்கி அமைதியான தேர்தல் இடம்பெறுவதற்கு அரசும் மக்களும் அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

No comments