ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய பொது அமைப்புகள் தேர்தலில் போட்டி- ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் கட்டுப்பணம்
(பாறுக் ஷிஹான்)
நுஜா ஊடக அமைப்பு மற்றும் பல பொது அமைப்புகளை முன்னிலைப்படுத்தி அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக வெள்ளிக்கிழமை(14) அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
நுஜா ஊடக அமைப்பின் தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் சுயேட்சைக் குழவிற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதன்போது, சுயேட்சைக்குழுவின் ஆலம்குளம் இணைப்பாளரும், எஸ்டோ அமைப்பின் கள உத்தியோகத்தருமான சப்ராஸ் பங்கேற்றிருந்தார்.
குறித்த சுயேட்சைக் குழுவில் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், உலமாக்கல், பெண்கள், இளைஞர்கள் என பலரும் போட்டியிடுகின்றனர்.
ஊழல், மோசடியில்லாத சிறந்த நிர்வாக ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக சுயேட்சைக் குழுவின் முதன்மை வேட்பாளரும், நுஜா ஊடக அமைப்பின் தலைவருமான சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்ததுடன் நிச்சயமாக அட்டாளைச்சேனை பிரதேசச சபைக்கு தமது அணியிலிருந்து பலரும் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும், மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
No comments