நாளை கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் ; கிழக்கு ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பங்கேற்கிறார்!!
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்திபெற்ற கல்முனை நகர் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத் திருவிழா நாளை (01) செவ்வாய்க்கிழமை காலை 10.41 முதல் 12.11 மணிவரையான சுபமுகூர்த்த வேளையில் நடைபெறும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
கொடியேற்றத் திருவிழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.
தொடர்ந்து பத்து நாட்கள் பகல் இரவுத்திருவிழாக்கள் நடைபெற்று 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேரோட்டம் இடம்பெறும் .மறுநாள் 12-ம் தேதி சனிக்கிழமை காலை தீத்தோற்சவம் இடம்பெறும் என்று ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் வேலாயுதபிள்ளை செவ்வேட்குமரன் ( பிரபல தமிழ் ஆசிரியர் ) தெரிவித்தார் .
மகோற்சவத்திருவிழா கிரியைகளை மகோற்சவபிரதம குருவான யாழ்ப்பாணம் வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ சி. குககணேசக் குருக்கள், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஸ்ரீராமச்சந்திர தவசீலக் குருக்கள் முன்னிலையில் நடாத்தவிருக்கிறார்.
தினமும் பகல் திருவிழா இரவு திருவிழா இடம் பெற்று அன்னதானமும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும்
ஐந்தாம் தேதி மாம்பழத் திருவிழாவும் , ஆறாம் தேதி திருவிளக்கு பூசையும், ஏழாம் தேதி பக்தி முக்தி பெருவிழாவும், எட்டாம் தேதி வேட்டைத் திருவிழாவும், ஒன்பதாம் தேதி திருக்கல்யாணத் திருவிழாவும், பத்தாம் தேதி சப்பரத் திருவிழாவும், இடம் பெற இருக்கின்றது.
11ஆம் தேதி வழமை போன்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் பிரம்மாண்டமான தேர்த்திருவிழா இடம்பெற இருக்கின்றது .
No comments