ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் இரண்டு வாளுடன் கைதான மூவரிடம் விசாரணை
பாறுக் ஷிஹான்
ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் இரண்டு வாளுடன் கைதான மூவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு தனியார் விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (25) இரவு ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் இரண்டு வாளுடன் அக்கரைப்பற்று பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அக்கரைப்பற்று பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அட்டாளைச்சேனை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேக நபரும் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபரும் அட்டாளைச்சேனை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதுடன் கைதான சந்தேக நபரிடமிருந்து 30 கிராம் 70 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் இரண்டு வாள் மீட்கப்பட்டிருந்தது.
மேலும் சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது பெண் சந்தேக நபரை விளக்கமறியலிலும் ஏனைய இரு சந்தேக நபர்களை 03 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.இதற்கமைய சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவான் பீரிஸ் நந்தலால் நெறிப்படுத்தலில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழிகாட்டுதலில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments