Vettri

Breaking News

20 வருடங்களின் பின்னர் குடிநீர் இணைப்பு- கவடாப்பிட்டி கிராமம் மக்கள் மகிழ்ச்சியில்- அரசுக்கு நன்றி தெரிவிப்பு!!




 வி.சுகிர்தகுமார்        

 அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கவடாப்பிட்டி கிராமம் சுமார் 20 வருடங்களின் பின்னர் குடிநீர் இணைப்பை பெற்றுக்கொண்டமையிட்டு அங்கு வாழும் மக்கள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர்.
இந்த அரசாங்கத்தின் ஊடாக குடிநீர் இணைப்பை வழங்கும் திட்டத்தில் குழாய்கள் பொருத்தும் வேலையினை ஆரம்பித்து வைக்கும் பணி நேற்று (12) இடம்பெற்றது.
இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்று நிலைய பொறுப்பதிகாரி எம்.றமீஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கவாடாப்பிட்டி கிராமமானது சுனாமி அனர்த்தத்தின் பின்னர் குடியேற்றப்பட்ட கிராமமாகும். இங்கு 80 குடும்பங்கள் வாழ்க்கின்றனர். ஆயினும் அங்கு குடிநீர் பெறும் வசதிகள் இல்லை. கிணறுகள் அமைத்தாலும் கூட குடிநீரைப்பெற முடியாத பாறைகள் நிறைந்த நிலக்கீழ்த்;தன்மையினை இக்கிராமம் கொண்டது.

இந்நிலையில் இங்குவாழ்ந்த மக்கள் அயல் கிராமங்களில் இருந்தும் அருகில் உள்ள ஆற்று நீரோடையில் இருந்தும் நீரைப்பெற்று வாழ்ந்து வந்தனர். பல வருடங்கள் பல அரசாங்கங்களிடம் இக்கோரிக்கையினை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போதைய பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மூலமாக அமைச்சர்களுக்கும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் இதன் அடிப்படையில் இன்று தமக்கு குடிநீர் இணைப்பு கிடைக்கவுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதேநேரம் இதற்காக பெரிதும் உதவி புரிந்த பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் தங்களது கோரிக்கையினை செவிமடுத்த தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்று நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் சம்மந்தப்பட்ட அமைச்சர் ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கும் நன்றி கூறினர்


No comments