சம்பள அதிகரிப்புடன் மேலதிக நேர கொடுப்பனவும் அதிகரிக்கப்படும் ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு!!
அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்திற்கு இணங்க மேலதிக நேர கொடுப்பனவும் அதிகரிக்கப்படுவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்க ஊழியர்களின் மார்ச் மாத சம்பளத்தை விட ஏப்ரல் மாதம் அதிகரித்த சம்பளத்தை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று (19) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
நாட்டின் சுகாதாரத்துறையில் டொக்டர்கள் முதல் சுகாதார உதவியாளர்கள் வரை அவர்களின் சேவை பாராட்டப்பட்டு மதிக்கப்படுகின்றது. அந்தவகையில் அவர்களுக்கு மேலதிக நேரமாக 120 மணித்தியாலங்களுக்கு மேல் பணி புரிய நேர்கின்றது. அதனை கருத்திற்கொண்டே டொக்டர்கள் முதல் அரசாங்க ஊழியர்கள் அனைவரினதும் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக எவரும் சந்தேகம் கொள்ளவேண்டிய அவசியம் கிடையாது.
இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாக சிறு சிறு குழுக்கள் குழப்பம் அடைந்திருந்தாலும் அதற்கு அகப்பட வேண்டிய அவசியம் கிடையாது.
No comments