தேடப்பட்டு வரும் பெண்ணின் தாய், தம்பி கைது!!
கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் (இலக்கம் 05) திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, கனேமுல்ல சஞ்சீவ எனும் சஞ்சீவ குமார சமரரத்ன என்பவம் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்படும் பெண்ணின் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப் பிரிவினால் (CCD) குறித்த கைது மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி இடம்பெற்ற குறித்து சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், இக்கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் இவர்கள் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த பிங்புர தேவகே சமிந்து திவங்க வீரசிங்க எனும் 23 வயது இளைஞனும், அதே முகவரியைச் சேர்ந்த சேசத்புர தேவகே சமந்தி எனும் 48 வயது பெண்ணும் கொலை தொடர்பான தகவல்களை மறைத்து, குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கொலையின் முக்கிய சந்தேகநபரான தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் இளைய சகோதரன் என தெரியவந்துள்ளது.
அதன்படி, இந்தக் குற்றச் செயல் தொடர்பாக இதுவரை 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
No comments