இலங்கையில் ஐக்கிய மக்கள் காங்கிரஸ் எனும் பெயரில் புதிய கட்சி!
நூருல் ஹுதா உமர்
நாட்டை நேசிக்கும் சிறந்த மக்கள் தலைவரும் அரசியல் செயற்பாட்டாளருமான முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தலைமையில் உருவாகியுள்ள குறித்த கட்சியின் பொதுச்செயலாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான ஏ.சி. யஹ்யாகான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் காரியாலயங்களில் ஒன்று சாய்ந்தமருதில் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் யஹ்யாகான் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள அநேகமான கட்சிகள் மீது மக்கள் வெறுப்புற்றுள்ளதாகவும் மக்களது நலனுக்காக மக்களது வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சிகளில் இருக்கும் சில அரசியல்வாதிகள் அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்க்கும் மனோ நிலையில் இருப்பதாகவும் அவ்வாறான நிலை மாறி நாட்டையும் மக்களையும் பற்றி யோசிக்க கூடிய சிறந்தவர்கள் தங்களது கட்சியின் பக்கம் அணிதிரள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.
சுசந்த புஞ்சிநிலமே, பிரதி அமைச்சராக இருந்த காலங்களில் இன மத வேறுபாடின்றி அனைத்து மக்களதும் நாட்டினதும் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.
நாட்டுப்பற்றுள்ள அனைத்து மக்களும் இன மத பேதமின்றி தங்களுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.சி. யஹ்யாகான் அழைப்பு விடுத்துள்ளார்.
No comments