Vettri

Breaking News

கேரளா கஞ்சா கடத்திய 2 பிரபல வியாபாரிகளுக்கு தடுப்புகாவல் உத்தரவு!!!




 ( பாறுக் ஷிஹான்) 

கேரளக் கஞ்சாவுடன் கைதாகிய இரு பிரபல வியாபாரிகளையும்  எதிர்வரும் பெப்ரவரி 11 ஆந் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை(5)  கல்முனை விசேட அதிரடிப்படையினரால் பெருந்தொகையான கேரளக் கஞ்சாவுடன் கைதான  2 பிரபல வியாபாரிகளையும் இன்று மன்றில் முன்னிலைப்படுத்திய போது கல்முனை நீதிமன்ற நீதிவான் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆந் திகதி 5 நாட்கள்  தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செய்தி பின்னணி


பெருந்தொகையான கேரளக் கஞ்சாவுடன் 2 பிரபல வியாபாரிகள் கல்முனை விசேட அதிரடிப் படையினரினால்   கைது செய்யப்பட்டனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் மறைந்திருந்த   ஒரு சந்தேக நபரும்  பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அக்பர் கிரா சனசமூக வீதி   முன்பாக உள்ள   பகுதியில் மறைந்திருந்த  மற்றுமொரு சந்தேக நபரும் கைதாகினர்.

கல்முனை விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரசகிய தகவலுக்கமைய தேடுதல் மேற்கொண்ட போது இவ்விரு சந்தேக நபர்களும் பெருந்தொகையான கேரளா கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன் கல்முனை விசேட அதிரடிப்படையினர் இரு வேறு  சந்தர்ப்பங்களில் புதன்கிழமை (5) அதிகாலை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 54 ,62 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் நீண்ட காலமாக இச்சந்தேக நபர்கள் கல்முனை, சாய்ந்தமருது ,மருதமுனை ,நற்பிட்டிமுனை, உள்ளிட்ட பகுதிகளில் கேரளா கஞ்சாவினை விற்பனை செய்தும் விநியோகித்தும் வந்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம்  கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைதான இருவரில் 7 கிலோ கேரளா கஞ்சாவினை வைத்திருந்தவர்  பெரிய நீலாவணை அக்பர் வீதியை சேர்ந்த பிரபல கைக்கடிகாரம் திருத்தும் நபர் என்பதுடன் 4 கிலோ கேரளா கஞ்சாவினை வைத்திருந்த   மற்றைய சந்தேக நபர் கல்முனை நகரில் அமைந்துள்ள பிரபல ஆடையகத்தை நடாத்தி வந்தவர் என்பதும் மேலதிக விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் சந்தேக நபர்கள் வசம்  இருந்து  பெருமளவான கேரளா கஞ்சா பொதிகள் ,ஒரு மோட்டார் சைக்கிள், 5 இலட்சம் 90 ஆயிரம்  ரூபா பண நோட்டுக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் கல்முனை விசேட அதிரடிப்படையினர் சட்ட நடவடிக்ககைகாக  பொலிஸாரிடம் ஒப்படைக்க தாயாராகி வருகின்றனர்.

இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி  பொலிஸ் அத்தியட்சகர்  குணசிறியின்  அறிவுறுத்தலுக்கமைய   அம்பாறை மாவட்ட பதில் கட்டளை அதிகாரியும் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகருமான  சம்பத்  ஆகியோரின் வழிகாட்டலில்    கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க மேற்பார்வையில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி  பொலிஸ் பரிசோதகர் பி.இஹலகே தலைமையிலான விசேட  அதிரடிப்படை  அதிகாரிகள்  இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments