" பிரதேச செயலாளர் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி"
( வி.ரி.சகாதேவராஜா)
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் "பிரதேச செயலாளர் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி"யின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி நிகழ்வுகள் நேற்று (28.01.2025) பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகளாக கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி லோகினி விவேகானந்தராஜா மற்றும் கோறளைப்பற்று வடக்கு கணக்காளர் திரு சுந்தரலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலகங்கள் இந்த சுற்றுப்போட்டியில் பங்குபற்றியதோடு அரையிறுதி போட்டிக்கு கோறளைப்பற்று, மண்முனை தென் எருவில்பற்று, கோறளைப்பற்று தெற்கு (கிரான்) மற்றும் கோறளைப்பற்று வடக்கு (வாகரை) ஆகிய பிரதேச செயலகங்கள் முன்னேறின.
இறுதிப்போட்டியில் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) மற்றும் கோறளைப்பற்று வடக்கு (வாகரை) ஆகிய பிரதேச செயலகங்கள் போட்டியிட்டதுடன், கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகம், 2025 ம் ஆண்டின் பிரதேச செயலாளர் கிண்ணத்தை சுவீகரித்தது.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் 3ம் இடத்தினையும், கோறளைப்பற்று பிரதேச செயலகம் 4ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
வெற்றியீட்டிய அணிகளுக்கான கிண்ணங்கள் மற்றும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், தொடரின் சிறந்த ஆட்டநாயகன் மற்றும் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் போன்ற விருதுகளும், பங்கேற்ற அனைத்து அணிகளுக்குமான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு த. நிர்மலராஜ் , நிருவாக உத்தியோகத்தர் திரு வே. தேவேந்திரன் , பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பெரியகல்லாறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
No comments