Vettri

Breaking News

பெரும்பாலானவர்களின் விருப்புக்கிணங்கவே சஜித்தை ஆதரித்தோம் - .சிறீதரன் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு!!




 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பெரும்பாலானவர்களின் விருப்புக்கிணங்கவே நிறைவேற்றப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வவுனியாவில் நேற்று (01) நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் மத்திய செயற்குழுவில் உள்ள 39 பேரில் 27 பேர் கலந்துகொண்டனர்.

அதேவேளை, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தன்னால் சுகயீனம் காரணமாக கூட்டத்தில் பங்குகொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தார்.

வேறு ஏதும் காரணங்களுக்காகக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறு அவர் கேட்கவில்லை.

இதேநேரம் சி.சிறீதரன் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான தனது விருப்பத்தை எழுத்தில் அறிவித்திருந்தார்.

யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழுவின் கோரம் 11 பேராகவே காணப்படுகின்றது.

இதனடிப்படையிலேயே, மூத்த துணைத் தலைவரான எனது தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது 17 பேர் பொது வேட்பாளரான அரியநேத்திரனை ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டிலும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் எழுத்து மூலமான முடிவு உட்பட ஆறு பேர் மட்டுமே ஆதரவாகக் கருத்துரைத்தனர்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 22 பேர் கருத்துரைத்ததுடன், இவற்றின் அடிப்படையிலேயே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேத்திரனை ஆதரிப்பதில்லை, எமது கட்சி உறுப்பினராகிய அரியநேத்திரன் ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து உடனடியாக விலக வேண்டும், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கல் ஆகிய மூன்று தீர்மானங்கள் எட்டப்பட்டன.

இந்தத் தீர்மானங்களுக்கு நானும் கட்டுப்பட்டவன். இதேநேரம் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஏதும் பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெற்றால் என்னால் மேடைக்கு வர முடியாது என்பதனையும் நான் பதிவு செய்திருந்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

No comments