Vettri

Breaking News

இன்றைய வானிலை!




 இன்றைய தினம் சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும்,வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.09 மணியளவில் களுத்துறை, நிவித்திகல, ஹகவத்த மற்றும் உகந்த  போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

திருகோணமலை தொடக்கம்  காங்கேசன்துறை மன்னார், புத்தளம் ஊடாக சிலாபம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 - 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள். ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 - 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

No comments