Vettri

Breaking News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக ஜனாதிபதிற்கு அமெரிக்கா கடிதம்!!




 இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (Easter Sunday Attack) குறித்த விசாரணைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா (US) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) எழுதியுள்ள கடிதத்தில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி செயலாளர் ரிச்சர்ட் ஆர். வெர்மா (Richard R. Verma)இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அமெரிக்காவின் அர்ப்பணிப்பை அவர் மீள வலியுறுத்தியுள்ளார்.

ஒரு வலுவான விசாரணையின் முக்கியத்துவத்தையும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் சிவில் சமூகத்தின் பங்கையும் வெர்மா எடுத்துரைத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கை அதிகாரிகளுக்கு சட்ட மற்றும் விசாரணை ஆதரவை வழங்குவதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கும் பொறுப்புக்கூறும் இலக்கை அமெரிக்கா பகிர்ந்துகொள்கின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணை தொடரும் போது எங்கள் இணைந்த செயற்பாடுகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எனவும், மேலும் இந்த முயற்சியில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் குரல்களை நாங்கள் மதிக்கிறோம் எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments