Vettri

Breaking News

தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதங்களைத் தேடி தனியார் காணியில் அகழ்வுப் பணி!!




 தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினால் யுத்த காலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் போன்றவற்றை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு (Mullaitivu) - புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியிலுள்ள தனியார் காணியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் (Dharmalingam Pradeepan) மேற்பார்வையில் இன்றையதினம் (16) குறித்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் காவல்துறை விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, காவல்துறையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர் இணைந்து அகழ்வு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

ஜேசிபி (JCB) அகழ்வு இயந்திரத்தின் உதவியுடன் நிலத்தில் பல மணிநேரம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போதும் ஆயுதங்களோ அல்லது வேறு எதனையும் கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தோண்டப்பட்ட இடங்களில் எதுவும் கிடைக்காததால், மீண்டும் தோண்டப்பட்ட இடங்களை மூட நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி தர்மலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments