Vettri

Breaking News

4000 அடியார்கள் பங்கேற்ற மாபெரும் பாதயாத்திரை!!





( காரைதீவு குறூப் நிருபர் சகா)

இந்துமத எழுச்சியாக 
காரைதீவு - மண்டூர் மாபெரும் பாதயாத்திரை நேற்று  (17) சனிக்கிழமை இடம்பெற்றது. சுமார் 4000 அடியார்கள் பக்தி பூர்வமாக பங்கேற்றனர்.

வரலாற்று பிரசித்தி பெற்ற " சின்னக் கதிர்காமம்" என அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கான வருடாந்த தலபாதயாத்திரை கடந்த 17ஆம் தேதி சனிக்கிழமை காரைதீவிலிருந்து அதிகாலை நான்கு மணியளவில் ஆரம்பமாகியது.

ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 19 ஆம் தேதி திங்கட்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய விருக்கிறது.

காரைதீவில் இருந்து அதிகாலை நான்கு மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் பாதயாத்திரை அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான் படங்களுடன் நந்திக் கொடி சகிதம் ஏழு உழவு இயந்திரங்கள் நகர அடியார்கள் பேரணியும் நகர்ந்தது. அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க யாத்திரை உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. பஜனைகள் குழுவினரின் பஜனை பக்திப் பாடல்களும் வழிநெடுகிலும் இடம்பெற்றன 

சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு அடியார்கள் அணி நீண்டிருந்தது. 
காவடியாட்டமும் இடையே இடம்பெற்றது.

காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம்  இந்த பாரிய பாதயாத்திரையை வருடாந்தம் நடத்தி வருகிறது.

 காரைதீவிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்ட பாதயாத்திரை கல்முனை நற்பிட்டிமுனை  சேனைக்குடியிருப்பு கிட்டங்கி நாவிதன்வெளி வேப்பையடி தம்பலவத்தை ஊடாக பகல் 12 மணியளவில் மண்டூரைச் சென்றடைந்தது.
இடையில் பல இந்து அன்பர்கள் அடியார்களுக்கு நீராகாரம் காலையுணவு தண்ணீர் போத்தல்கள் பழரசம் பால் சோறு என்று தாராளமாக வழங்கினார்கள்.

 தம்பலவத்தையில் பிரபல சட்டத்தரணி நடராசா சிவரஞ்சித் மற்றும் அவரது சகோதரர் ஜீவராஜா( லண்டன்) ஆகியோர் சுமார் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள்.




No comments