Vettri

Breaking News

பதவிக்காலம் முடிவடைவதுக்குள் தீர்வு வேண்டும்!!




 ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் 03 மாதங்களே உள்ளன. இது முடிவதற்குள் தமிழ்த் தேசிய பிரச்சினையை ஜனாதிபதி தீர்த்து வைக்க வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சம்பந்தனின் ஆயுட் காலத்திலேயே தமிழ்த் தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்க வேண்டுமென்று ஜனாதிபதி சபையில் உரையாற்றும்போது குறிப்பிட்டார். ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும்

03 மாதங்கள் உள்ளன. குறிப்பாக இந்த வருடம் ஒக்டோபர் முடிவதற்கு முன்னர் இப்பிரச்சினையை ஜனாதிபதி தீர்த்து வைக்க வேண்டுமென்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் மறைவு தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுதாபம் தெரிவித்து உரையாற்றிய பின்னர் சுமந்திரன் எம்பி இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

சுமந்திரன் எம்.பி. தெரிவிக்கையில்;

சம்பந்தனின் மறைவு தொடர்பாக அனுதாபம் வெளியிட்டமைக்கு ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜனாதிபதி தமது உரையின் போது தாமும் சம்பந்தனும் ஒன்றாக பாராளுமன்றத்துக்கு வந்தமை தொடர்பில் குறிப்பிட்டார். சம்பந்தனின் ஆயுட் காலத்திலேயே தமிழ்த் தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், துரதிஷ்டவசமாக அவர் மறைந்து விட்டாரெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


எனவே, மீண்டும் மீண்டும் நாம், வலியுறுத்துவது என்னவெனில் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர், இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

இதை விநயமாக இந்த சபையில் கேட்டுக்கொள்கிறேன்.நாட்டு மக்கள் அனைவரும் திருப்தியடையும் வகையில் இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments