Vettri

Breaking News

செயற்கை ஹொக்கி மைதானம் திறக்கப்படும் - விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!!




 மாத்தளை செயற்கை ஹொக்கி மைதானத்தையும் கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும் ஒரு சில விளையாட்டு சம்மேளனங்களில் நிலவும் சட்ட சிக்கல்களைத் தீர்த்து விளையாட்டுத்துறையில் புதிய யுகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல வருடங்களாக அபிவிருத்திப் பணிகள் தடைப்பட்டிருந்த கொழும்பு ரீட் மாவத்தையில் அமைந்துள்ள செயற்கை ஹொக்கி மைதானமும் மாத்தளை செயற்கை ஹொக்கி மைதானமும் நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் பணிப்புரைக்கு அமைவாக விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன் கீழ் மாத்தளையில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்திற்கு 140 மில்லியன் ரூபாவும் கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்திற்கு 160 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த இரண்டு ஹொக்கி மைதானங்களும் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்

No comments