Vettri

Breaking News

அரசாங்கத்தின் புதிய மின்சார சட்டம்




 


மின்சாரத் துறைக்கு புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான  திருத்தச் சட்டமூலமொன்று 2002 இல் சமர்ப்பிக்கப்பட்டபோது தற்போதைய அரசாங்கத்தின் சில தரப்பினர் அதை எதிர்த்தனர். 2002 இல் கொண்டு வரப்பட்ட சட்டத்துடன் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டத்தை, இரண்டு சட்டங்களையும் ஒப்பிடும் போது, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் 2002 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் காணப்படுகின்ற விடயங்கள் சிறந்து விளங்குகின்றன. நாடும் மக்களும் வங்குரோத்து நிலையில் உள்ள வேளையில், வீழ்ச்சி கண்டுள்ள நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டமூலமொன்று முறையற்ற முறையிலும், முறைசாரா முறையிலும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையை வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இலங்கை மின்சார சட்டம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த புதிய சட்டம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த சாதகமான திருத்தங்களை நடைமுறைப்படுத்துங்கள். இதன் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும்  வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தலாம். இவை ஏற்படுத்தப்படும் பட்சத்தில் இதற்கு ஆதரவை வெளிப்படுத்த முடியும். ஆனால் இதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சட்டமூலத்தில் கட்டமைப்பு ரீதியான பலவீனம் காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும், இச்சட்டத்தின் மூலம் இந்தத் துறை தீவிரமாக அரசியல்மயமாக்கப்பட்டு, அமைச்சர் கூடிய அதிகாரங்களைப் பெற்று, தடைகள் மற்றும் சமன்பாடுகள் இல்லாது போகிறது. பனிப்பாளர் சபையை நியமித்துக் கொள்ளும் அதிகாரம் கூட  அமைச்சருக்கு செல்கிறது. இதையெல்லாம் அமைச்சரால் கட்டுப்படுத்தவும் முடியும். எனவே, இந்த சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த சட்டத்தின் மூலம், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை பலவீனப்படுத்தியுள்ளனர். கட்டுப்பாட்டாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, கட்டுப்பாட்டாளர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, அமைச்சருக்கு கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இங்கு தொடராக மின்சாரம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படவில்லை. இது பாரபட்சமான செயல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சட்டத்தின் மூலம் மின்சார சபையின் சொத்துக்களை மதிப்பிடும் முறை இங்கு குறிப்பிடப்படவில்லை. இலங்கை மின்சார சபை ஒரு டிரில்லியனுக்கும் அதிகமான வளங்களைக் கொண்டுள்ளது. இந்த பங்குகளுக்கு என்ன நடக்கும் என்பது இங்கு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இங்கு அச்சம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

அமைச்சர் விரும்பியவாறு அரச வளங்களை விற்கும் போக்கு ஏற்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எனவே, கொள்முதல் முறை, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை கண்டிப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும். இந்நாட்டில் 220 இலட்சம் மக்கள் மீது அதிக மின் கட்டணத்தை சுமத்தி நடந்து வரும் இந்த சுரண்டல்களை நிறுத்த வேண்டும். இதில் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கும் முற்போக்கான திருத்தங்களும் உள்ளடக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

No comments