Vettri

Breaking News

மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற 18 வயதுக்குட்பட்ட 8சிறுவர்கள் மீட்பு; உரிமையாளர்களுக்கு அபராதம்!!




 இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் விசைப்படகில் 18 வயதுக்கு கீழ் உள்ள 8 சிறார்கள் தொழிலாளர்களாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கபட்டு படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.20,000 அபராதம் விதித்ததுடன், அரசு வழங்கும் மானிய டீசல் மற்றும் மீன்பிடி அனுமதிச்சீட்டு இரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.


இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன் பிடித்துறை முகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந் நிலையில் எல்லை தாண்டி பிடியில் ஈடும் வழக்கில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் இராமேஸ்வரம் விசைப்படகுகளில் சிறார்கள் கைது செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதன் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சொல்லும் மீன்பிடி படகுகளில் சிறார்கள் மீன்பிடித் தொழிலில் பயன்படுத்தபடுகிறார்களா என்பது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், தொழிலாளர் நல வாரியம் மற்றும் மீன் வளத்துத்துறை அதிகாரிகள் கூட்டாக திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது நேற்று (26) இராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று இன்று (27) காலை கரை திரும்பிய 8 மீன்பிடி படகுகளில் 8 சிறார்கள் மீன்பிடித்தொழில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அந்த 8 சிறார்களை மீட்ட தொழிலாளர் அமலாக்கப் பிரிவு உதவி ஆணையர் மலர்விழி தலைமையில் அதிகாரிகள் சிறார்கள் மீன்பிடி தொழிலுக்கு வரக்கூடாது, பள்ளிக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கியதுடன் சிறார்களை மீன்பிடி தொழிலில் பயன்படுத்திய விசைப்படகின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், சிறார்களை மீன் பிடி தொழிலில் ஈடுபடுத்திய அதற்காக தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதி சீட்டு மற்றும் மானிய டீசல் இந்த வழக்கு முடியும் வரை இரத்து செய்யப்படுவதாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெயரானி உத்தரவிட்டுள்ளார்.

மீன்பிடி விசைப் படகுகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களை தொழிலுக்காக பயன்படுத்தினால் படகு உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் எச்சரித்ததோடு, மீனவ அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.

No comments