Vettri

Breaking News

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொடர்பான விரிவான திட்டம்!




 இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் எதிர்காலப் போக்குகள் குறித்து ஆராய விரிவான திட்டம் ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று  இடம்பெற்ற 'வலுசக்தி மாற்றத்தின் எதிர்காலப் பாதை' எனும் தலைப்பில் இடம்பெற்ற வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை சுட்டிக்காட்டினார்.

உலக வங்கி, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வட்டமேசைக் கலந்துரையாடல், இலங்கையின் வலுசக்தி மாற்றம் குறித்து கலந்துரையாடும் தளமாக அமைந்தது.

அதன்போது, உள்நாட்டு நிபுணத்துவத்தைப் பெறுவதில் உள்ள சிரமங்களைப் பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சிற்கு ஏற்கக்கூடிய பல திருத்தங்களுடன் இரண்டு நாட்களுக்கு முன்பு உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட மின்சார சீர்திருத்த சட்ட மூலத்தை நாம் ஏற்கனவே முன்வைத்துள்ளோம். எதிர்வரும் மாதத்தில் இந்த சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பொருளாதார மாற்ற சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது இப்போது உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இது நிச்சயமாக இந்த ஜூலை தொடக்கத்தில் சட்டமாக மாறும். எனவே, இந்த நடவடிக்கைகள் தற்போது அரசியலமைப்பு சபையில் நடைபெற்று வருகின்றன.

மேலும், காலநிலை மாற்ற சட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருகிறது, இது தொடர்பான மூன்றாவது சட்டமாகும். நான்காவதாக, வலுசக்தி மாற்றத்திற்கான சட்டத்தை நாம் கலந்துரையாட வேண்டும். சில நாடுகளில் வலுசக்தி மாற்றம் தொடர்பான சட்டங்கள் உள்ளன. நாங்கள் அதை ஆய்வு செய்து வருகிறோம், மேலும் தெற்கு அவுஸ்திரேலியா போன்ற சில பகுதிகளில் அந்தச் சட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதையும் ஆய்வு செய்துள்ளோம். வலுசக்தி மாற்றத்திற்கான சட்டத்தை உருவாக்குவதற்கு இது நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு மட்டுமின்றி, மின்சாரம் விநியோகிப்பதற்கும் அந்த துறைகளை திறந்து விடுகிறோம். அதன்போது தனியார் துறை முக்கிய பங்கு வகிக்கும் என்றார். 

No comments