Vettri

Breaking News

மன்னாரில் போதை பொருள் விற்பனையுடன் தொடர்புபட்ட 9 கோடியே 30 இலட்சம் ரூபா சொத்து முடக்கம்




 




பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய தேடுதல் நடவடிக்கையின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவு கீழ் பணிக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மன்னாரில் சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் இன்று வியாழக்கிழமை (2) முடக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சந்தேக நபர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு வீடுகள்,சொகுசு வாகனம் உள்ளடங்களாக 9 கோடியே  30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள்  மேற்படி  நீதிமன்ற அனுமதியுடன் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் 2002 ஆம் ஆண்டு அரச வீட்டுத்திட்டம் ஒன்றை பெற்று இரண்டு படகுகளை வைத்து சாதாரண குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில் 2019 பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் பல கோடி சொத்துக்களை சேர்த்துள்ளார்.

அதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் இயங்கும் சொத்து முடக்கள் பிரிவினர் கடந்த இரண்டு வருடங்களாக   விசாரணைகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் நீதிமன்ற அனுமதியை பெற்று வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜசேகர மேற்பார்வையின் கீழ் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் தலைமையில் கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவின் சட்ட விரோத விசாரணை பிரிவு பொலிஸாரினால் தற்காலிகமாக இன்றில் இருந்து 7 தினங்களுக்கு சந்தேக நபரின் சின்னக்கடையில் காணப்படும் கடைதொகுதியுடன் கூடிய வீடு ஒன்றும் தலைமன்னார் பகுதியில் உள்ள விசாலமான வீடு சொகுசு வாகனம் ஒன்று முடக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இதனை தொடர்ந்து உயர் நீதி மன்றத்தின் அனுமதியுடன் சொத்துக்களை அரசுடமையாக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளும் நடவடிக்கையில் பொலிஸார் ஈட்பட்டுள்ளனர்.

வடக்கில் சட்ட விரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை என்பதுடன் இது போன்று சட்ட விரோதமாக சொத்துக்கள் ஈட்டிய பல்வேறு நபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments