Vettri

Breaking News

விகாரையில் தேரர் சுட்டுக் கொலை ; மேலும் ஒருவர் கைது!!





 கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பகுதியிலுள்ள உள்ள விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மல்வானையில் வியாழக்கிழமை (15)  மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் 10 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி மாதம்  23ஆம் திகதி அதிகாலையில் கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் உள்ள விகாரைக்கு காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த தேரர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு சென்றது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 45 வயதான கலபாலுவாவே தம்மரதன தேரர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.  இதேவேளை குற்றவாளிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் T-56 துப்பாக்கி நான்காவது சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதனை தவிர, கைக்குண்டு, கைத்துப்பாக்கி, 3 மகசீன்கள், 15 கிராம் ஹெரோயின், 19 தோட்டாக்கள், போலி பதிவுத் தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட காரின் ரிமோட் சுவிட்ச் மற்றும் கைத்தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

No comments