Vettri

Breaking News

அம்பாறையில் அபிவிருத்திகளுக்காக ரூ. 402 மில்லியன் ஒதுக்கீடு!!




 

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தகவல்

 அம்பாறை மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்காக பன்முகப்படுத்தப்பட்ட வரவு, செலவுத் திட்டத்தினூடாக 402 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யூ.டி.வீரசிங்க தலைமையில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்ட செயலகத்தில நேற்று முன்தினம் புதன்கிழமை (14) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தவிசாளர்களான கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம, பாராளுமன்ற உறுப்பினர்களான விமலவீர திஸாநாயக்க, பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எஸ்.எம்.முஸாரப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டதுடன், பொதுமக்களின் நலன் கருதி எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

கல்வி, நீர்ப்பாசனம், வீதி, மின்சாரம், வீடமைப்பு உட்பட அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக திணைக்களத் தலைவர்களிடம் இதன்போது கேட்டறியப்பட்டதுடன், இந்த வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் வலியுறுத்தப்பட்டது.

No comments