Vettri

Breaking News

300 ஆண்டுகள் பழமை: கல்முனை மாநகரில் அருள்மிகு தரவை விநாயகர் மஹோற்சவம்!!













(செ.துஜியந்தன் )

  வரலாற்று சிறப்புமிக்க கல்முனை மாநகர் அருள்மிகு தரவைச் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா, இன்று 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.


 தொடர்ந்து 12  நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா, எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறும்.

 இந்த திருவிழாவினை ஒட்டி தினமும் சிறப்பு பூஜைகளும் விசேட  நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 இந்தத் திருவிழாவையொட்டி விசேட கிரியைகள் நேற்று பன்னிரெண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியது.

 12 நாட்களும் பிற்பகல் 4 மணியிலிருந்து இரவு 9 மணி வரை -  காலை ஞான பூஜை, யாக பூஜை, நித்திய பூஜை,தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை தினமும் நடைபெறுவதோடு, சுவாமி உள்வீதி, வெளி வீதியில்  வலம்வந்து அடியார்களுக்கு   தரிசனம் கொடுப்பார்.


 இந்த மகோத்சவ திருவிழாவின்  பிரதம குருவாக  சிவஸ்ரீ  பத்ம நிலோஜ  ஈசான சிவம் தலைமையில் நடைபெறும்.

 இந்த ஆலயத்தின் பிரதம குருவான  .

விஷ்வ பிரம்ம  ஸ்ரீ  சு.கரிகரன் ஐயாவும் பூஜைகளுக்கு தலைமை தாங்கி வழி நடத்துவார். உதவி  குருமார்களாக  பிரேம ஸ்ரீ விவேக் ஐயா, சுரேஷ் ஐயா, ஜெயராஜ் ஐயா ஆகியோரும் செயல்படுவார்கள்.


 தினமும் மாலை 6:00 மணி முதல் 6:30 வரை கூட்டுப் பிரார்த்தனை இடம்பெறும். கல்முனை -3 பன்னிசை மன்றத்தினர் இதனை நடத்துவார்கள்.

 இதேவேளை, இரவு ஆறு முப்பது முதல் ஏழு மணி வரை நற்சிந்தனை நடைபெறும்.


 தீர்த்தோற்சவம் 24 ஆம் தேதி நிறைவு பெற்றதும் அடியார்களின் உதவியுடன் அன்னதானம் வழங்கப்படும்.


 இந்த  திருவிழாவின் சிறப்பான நிகழ்வாக எதிர்பார்க்கப்படும், யானைகள் முன்னே அணிவகுத்து செல்ல,முத்து சப்புரத்தில்  விநாயகப் பெருமான் பவனி வரும் வீதி உலா எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறும் என ஆலய நிர்வாக சபையின் தலைவர் கிருஷ்ணபிள்ளை நாகராசா தெரிவித்தார்.


கல்முனை ஸ்ரீ தரவைச்சித்தி விநாயகர் ஆலயத்தின் வரலாறு சுமார்  300 ஆண்டுகள்  மிகத்தொன்மை வாய்ந்ததாகும். கல்முனை மாநகரில் புதுப்பொலிவுடன் கம்பீரமாய் காட்சியளிக்கும் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயம் இங்குள்ள தமிழ் மக்களின் இருப்பை, பழமையை பறைசாற்றும் ஆலயமாக இருந்து வருகின்றது.


ஓர் இனத்தின் இருப்பை அதன் மொழி, கலை.கலாசார, பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்களே எடுத்துக்காட்டுகின்றன. அதில் முக்கியமான இடமாக வழிபாட்டுத்தலங்கள் காணப்படுகின்றன. இவ் வழிபாட்டுத்தலங்களை வைத்துத்தான் எம் முன்னோர்கள் பற்றியும் அவர்கள் வாழ்வியல் பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது.


கல்முனைவாழ் தமிழ் மக்களின் இருப்பையும், சரித்திரத்தையும் பறைசாற்றி நகரின் பிரதான வீதியில் கம்பீரமாய் தோற்றமளிக்கும் ஸ்ரீ தரவை சித்திவிநாயகர் ஆலயத்தின் தோற்றம், வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது.


 இவ் ஆலயம் பற்றி குறிப்பிடுகையில், 300 வருடங்கள் பழைமைவாய்ந்த ஆலயம் என திரு. காசிநாதன் என்பவர் தனது ஏடுகளில் குறிப்பிட்டிருந்தார். ஏறக்குறைய 300 ஆண்டுகளிற்குமுன் தற்போது பிரதான வீதியாக விளங்கும் அன்று நீர் வளம் பொருந்திய செழிப்பான நிலப்பகுதியை உள்ளடக்கியிருந்தமையால்,தமிழ் மக்கள் இப்பகுதியில் வதிவிடங்களை அமைத்து பள்ளம் பார்த்து பயிர்செய்து,மழைநீரை

தேக்கிவைத்து, பாசன வசதிக்காய் குளங்களை அமைத்து, அருகாமையில் காடுகளை அழித்தும், வயல்களாக்கி வேளாண்மையில் ஈடுபட்டும் செல்வச்செழிப்புடன் வாழ்ந்துவந்தார்கள்.



தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்துவந்த பகுதியின் மத்தியில், குளக்கரையின் ஓரமாய் மணற்திட்டியும் மறுபுறம் ஆழமான பள்ளமும் அது நிறைய தாமரை மலர்களையும் கொண்ட தடாகம் போல் காட்சியளித்தது. வேளாண்மை செய்வதற்காக வயலுக்குச் செல்பவர்கள் இதன் கரையோரமாகவே செல்வர்.


 ஒருநாள் இப்பாதையோரமாக கருங்கல் ஒன்று தென்பட்டது.சிவனடியான் என்பவர் அக்கல்லினை கடந்து செல்லும் போது அவரின் வலதுகால் பெருவிரல் தாக்குண்டு இரத்தம் சொட்டியது. இதனால் கோபம் கொண்ட அவர் கல்லினைத்தூக்கி அருகாமையில் இருந்த ஆழமான பள்ளத்தினுள் எறிந்துவிட்டுச்சென்றார். மறுநாள் அக்கல் பாதையில் தென்பட்டது இதனால் ஆத்திரம் கொண்ட அவர் மீண்டும் தூக்கியெறிந்துவிட்டுச்சென்றார்.

இப்படியாக பல நாட்கள் தூக்கிவீசப்படுவதும் கல் மீண்டும் தென்படுவதுமாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்தது. இது இப்படியிருக்க ஓர் இரவு சிவனடியானின் கனவில் ஓர் உருவம் தோன்றி அடியானே உன்னால் வீசப்படும் கல் சாதாரண கல் அல்ல எனக்கூறி;யதும் அக்கல் விநாயகப்பெருமானின் முகச்சாயலுடன் தாமரைதடாகத்தின் மேலால் மிதந்துவந்து தரையிலே அமர்ந்ததும் அவ்வுருவம் மறைந்துவிட்டது. மறுநாள் காலையில் கனவினில் கண்ட விநாயகப்பெருமானின் முகத்தினை ஒத்த கல் இருப்பதை கண்ட அவர் அயலில் உள்ளவர்களை அழைத்துவந்து தான் இரவு கண்ட கனவினை கூறியதும் எல்லோரும் சேர்ந்து அக்கல்லினை தூக்கி அருகிலிருந்த மணல்மேட்டில் விநாயகர் வடிவிலான அக்கல்லினை வைத்து பச்சை இலைகுழைகளினால் பந்தலிட்டு தரையில் கண்டெடுக்கப்பட்டமையால் தரவைப்பிள்ளையார் எனப்பெயர் சூட்டியும் வணங்கி வந்தனர்.


இப்பிரதேசத்தில் வாழ்ந்துவந்த இந்துக்களின் வழிபாட்டிற்காக முதன்முதல் தோன்றிய வணக்க ஸ்தலமாகையால் அயல் கிராமங்களில் வசித்து வந்த மக்கள் தினமும் கால்நடையாகவும் மாட்டு வண்டில்கள் மூலமாகவும் வந்துவணங்கிச் செல்வார்கள். தரவைப்பிள்ளையார் மீது நம்பிக்கைகொண்டு அருள் பெற்ற மக்கள் கோயில் ஒன்று கட்டவேண்டும் என்ற அவா ஏற்பட்டமையால் வைரமான மரங்களைக்கொண்டு எம்பெருமானுக்கு கோயில் அமைத்தார்கள்.


ஆலயப்பகுதி மாட்டு வண்டில்கள் மூலமாகவும் கூடைகளிலும் மண்சுமந்து நிரப்பப்பட்டது. உறுதியான பாலை, முதிரை, இராணை போன்ற மரங்களால் ஆலயம் அமைக்கப்பட்டது. பூசகராக நாகைய்யா என்பவர் நியமிக்கப்பட்டு தினப்பூசையும் இடம்பெற்றது. பின்னர் பெருத்த மரங்களை தோண்டி தீர்த்தக்கிணறும் அமையப்பெற்றது. தீர்மானங்கள் யாவும் தங்குதடையின்றி நிறைவேற்றப்பட்டமையால் ஆலயத்தினை பரிபாலிப்பதற்காக பரிபாலனசபை ஒன்று நிறுவப்பட்டது. இதன் தலைவராக திரு. ஆறுமுகம் என்பவரும் காரியதரிசியாக திரு. மயித்தாரும் பொருளாளராக திரு. வ.சின்னத்தம்பியும் இவர்களுடன் மேலும்

ஐந்து உறுப்பினர்களும் மக்களால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு சபை இயங்கத் தொடங்கியது.


இவர்கள் காலத்தில் முதன்முதல் நடைபெற்ற உற்சவம் 'திருவாதிரை' ஆகும். இக்காலப்பகுதியில்தான் தரவையில் கண்டெடுக்கப்பட்டமையாலும் பல சித்திகள் செய்தமையாலும் ' தரவைச்சித்தி விநாயகர் ' எனப்பெயர் சூட்டப்பட்டது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பிலிருந்து தென்புறமாக அமைந்த பிரதான பாதையின் அருகேதான் ஆலயம் அமையப்பெற்றிருந்தது. வழிப்போக்கர்கள் வழிபடவும் கதிர்காமம் போன்ற தலங்களுக்கான யாத்திரை செய்வோர் தங்கிச் செல்லும் மையமாகவும் காணப்பட்டது. மட்டக்களப்பின் மாகாண அதிபராய் இருந்த சேர். கென்றி வோட்ஸ் என்பவர் தென்பகுதிக்கு குதிரை வண்டி மூலம் தனது கடமைகளை மேற்கொள்வது வழக்கம். அப்படி ஒரு நாள் தெற்குப்பயணத்தினை மேற்கொள்ளும் போது ஸ்ரீ தரைவச்சித்தி விநாயகர் ஆலயத்தினை அண்டியதும் திடீரென குதிரை நின்றுவிட்டது. குதிரையோட்டி எவ்வளவோ முயன்றும் வண்டி நகரவில்லை. இறங்கிவந்து பார்த்தபோது கோயிலில் பூசை நடைபெறுவதை கண்ட குதிரையோட்டி மாகாண அதிபருக்கு அதனை தெரியப்படுத்தியதும் அவர் இறங்கிவந்து பூசையில் கலந்துகொண்டு வண்டியில் ஏறியதும் குதிரை நகரத் துவங்கியது. தான் மேற்கொண்ட பயணத்தை முடித்து மீண்டும் வரும்போது ஆலயத்தின் முன் நின்றவர் அப்பகுதி மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து ஆலயத்தினை பராமரிக்கும் சமூகத்தினரின் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவதற்காக அன்றைய காலப்பகுதியிலிருந்த பரிபாலனசபைக்கு சட்டபூர்வமான அதிகாரத்தினை வழங்கி ஆலயத்தின் தென்புறம் தற்போதய செய்லான் வீதியின் மேற்குப்பக்கம் இருந்த வடிகான் வாயிலிலிருந்து வடக்கு நோக்கி ஏழு சங்கிலிப்பூமியும் ஆலயத்தினை பரிபாலிப்பதற்காக அக்காலத்தில் குடியிருந்த மக்களுக்கு 73 ஏக்கர் விவசாய நிலத்தினையும் சட்டபூர்வமாக வழங்கினார்.


இதனை ஏற்றுக்கொண்ட நிருவாகத்தினர் கோயில் பூசகரின் வேதனம் கொடுப்பதற்காக 5 ஏக்கரினையும் உதவிப்பூசகருக்கு 1 ஏக்கரினையும் கல்முனை 01 பிரிவில் அமைந்துள்ள ஆலயத்தில் எம்மினத்தவர் இணைந்திருந்தமையால் அதற்கென ஒரு ஏக்கரினையும் வழங்கியபின் மிகுதியை வருடாந்தம் உரியசந்ததியினர் சுழற்சிமுறையில் பங்கீடு செய்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றுவரை இம்முறை வழக்கத்தில் உள்ளது.


ஆலயத்தின் மீது பற்றுறுதிகொண்ட மாகாண

அதிபர் நிரந்தர ஆலயம் அமைப்பதற்காக ஒரு சிறந்த பறங்கி இனத்தவ சிற்பக்கலை கலைஞரை அறிமுகப்படுத்தி கொடுத்ததின்பேரில் மிகவும் பெறுமதி வாய்ந்ததும் மிகவும் அழகிய செயற்பாடுகளுடன் கூடிய நிலைகளையும் பிரம்மிக்கத்தக்கவகையிலான சிற்பக்கலையம்சம் பொருந்திய மரத்தினாலான தூண்களையும் நிறுவி ஆலயத்தினை ஆச்சரியப்படும் அளவிற்கு அழகுகள் செய்துதந்தார். பல வருடங்கள் தொடர்ந்த ஆலயப்பணி கற்பக்கிரகம் அர்த்த மண்டபம்,மகாமண்டபம், நிருத்த மண்டபம்,பரிவாரக்கோயில்கள்,மடப்பள்ளி,உட்பிரகாரம்,சுற்றுமதில் போன்றவைகளை உள்ளடக்கியதும் கட்டிடங்கள்; ஸ்தூபிகள் சிற்பங்களாலும் ஓவியர்களின் கைவண்ணமும் பெற்றிருந்ததால் நித்திய நைமித்திய கிரியைகள் செவ்வனே நடைபெற்றுவந்தது.


இவ்வாலயம்,அமையப்பெற்ற இலங்கைத்தாயின் கிழக்குக்கரையோரப்பகுதி பல இயற்கை அழிவுகளிற்கு உள்ளாகியது. குறிப்பாக 1907இல் சூறாவளி, 1915இல் பெருஞ்சூறாவளி, 1957இல் பெரு வெள்ளம், மற்றும் 1978இல் பெருஞ்சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களில் பரந்தவெளியிலிருந்த கோயிலுக்கும் அதுசார்ந்த கட்டிடங்களுக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. ஆனால் 1986 காலப்பகுதியில் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்தின் போது 1986.12.13 அன்று ஆலயம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதுடன் மூல விக்கிரகத்தின் கழுத்தில் சங்கிலியால் பிணைத்து உழவு இயந்திரம் கொண்டு இழுத்து அழுக்குக்கானுக்குள் போட்டதுமல்லாது,உள்ளடங்கிய கட்டிடங்கள்,மதில்கள் யாவும் தரைமட்டமாக்கப்பட்டன.


அதே தினத்தில் ,இவ்நிருவாகத்தின் பொறுப்பிலிருந்த கடற்கரை கண்ணகை அம்மன் ஆலயமும் நாசகார கும்பலினால் இடித்து அழிக்கப்பட்டது.

 இனக் கலவரத்தின் கோரமுகம் ஒரு பக்கம் இருந்தாலும், ஊர் மக்களின் ஒத்துழைப்போடு இந்த ஆலயம்  கட்டப்பட்டு இப்போது மிகவும் கம்பீரமாக காட்சியளிப்பதோடு , அருளாட்சியும் புரிந்து கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் வருகின்ற பெப்ரவரி மாதத்தில் இந்த ஆலயத்தின் மகோற்சவம் நடைபெற்று வருகிறது.

No comments