Vettri

Breaking News

கஹதுடுவ கொலை: கொல்லும் நோக்கத்தில் தான் தாக்கவில்லை என சந்தேக நபர் வாக்குமூலம்!!




 தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ பரிமாற்றத்திற்கு அருகில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்ட நபர், வெளிநாட்டில் இயங்கி வரும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான எல்லாவல லியனகே தர்மசிறி பெரேரா என்றழைக்கப்படும் தர்மசிறியின் மூத்த சகோதரர் ஆவார்.

47 வயதான எல்லாவல லியனகே டன்ஸ்டன் பிரசாத் பெரேரா, உயிரிழந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

41 வயதான சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஊழியர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

பிலியந்தலை, மடபாத பிரதேசத்தில் வசிக்கும் குறித்த பெண், வேலை முடிந்து வீடு திரும்பும் போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி நான்கு பிள்ளைகளுடன் தன்னை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்றதாக விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் பின்னர், அவர் உயிரிழந்த பெண்ணுடன் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நெருங்கிய உறவைப் பேணி வந்ததாகவும், பல நாட்கள் கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் காரில் வந்து, வேலை முடிந்து வீடு திரும்பும் போது, ​​அவரது வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டுச் செல்வதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளின்படி, குறித்த பெண் கொலை செய்யப்பட்ட நாள் காலை முதல் அவருடன் தொலைபேசியில் வாக்குவாதம் செய்துள்ளார்.

சந்தேக நபர் கொழும்பில் விசா ஆலோசனை அலுவலகம் ஒன்றையும் கட்டிட நிர்மாண நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமை போன்று செவ்வாய்கிழமை மதியம் அவளை அழைத்துச் செல்லச் சென்ற போதும், அவர் தன்னுடன் வர மறுத்து முச்சக்கர வண்டியில் செல்ல முற்பட்டதால் ஆத்திரம் காரணமாக தனது காரில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து கழுத்தை அறுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவளை கொல்லும் நோக்கத்தில் தான் தாக்கவில்லை என்றும், பின்னர் அவர் இறந்துவிட்டதை அறிந்ததாகவும், அதனை தொடர்ந்து வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சந்தேகநபர் பல தடவைகள் மிரட்டல் விடுத்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக சந்தேகநபருக்கும் குறித்த பெண்ணுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு குறித்த பெண் தனது கணவருடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதேவேளை, கொலைச் சம்பவத்திற்காக சந்தேகநபர் வந்த காரை, சந்தேகநபரின் பெக்ககம வீட்டுக்கு முன்பாக நேற்று பிற்பகல் கஹதுடுவ பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


No comments