Vettri

Breaking News

அலி சப்ரியை நீதி அமைச்சராக நியமிக்க வேண்டாம் என நான் முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவித்தேன்: கர்தினால்





 அலி சப்ரியை தனது அமைச்சரவையில் நீதி அமைச்சராக நியமிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தாம் அறிவித்ததாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமைச்சரவையில் அலி சப்ரியை நீதி அமைச்சராக நியமிக்க வேண்டாம் என நான் அவருக்கு அறிவித்திருந்தேன். சப்ரியை நீதி அமைச்சராக நியமித்த முன்னாள் ஜனாதிபதியின் நடவடிக்கை குறித்து பௌத்த பிக்கு ஒருவர் என்னை எச்சரித்ததை அடுத்து நான் இதனை செய்தேன்” என கர்தினால் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் சப்ரியில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு குறிப்பிட்ட மதக் குழுவால் நடத்தப்பட்டது என நாங்கள் நினைத்ததால், நியமனம் குறித்து ஆரம்பத்தில் நாங்கள் கவலைப்பட்டோம். எனினும் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் வேறொரு சதி இருப்பதாகத் தெரிந்ததும் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டோம்” என கர்தினால்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்கான உபகுழுவை அவர் நியமித்ததன் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ மீதான எனது நம்பிக்கை இழக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகவியலாளர்களிடம் கூறியது போல், அவரைச் சந்திக்க தேவாலயம் தயாராக இல்லை என்று கர்தினால் கூறினார். “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகளை புதிய விசாரணைகளில் ஈடுபடுத்துவதற்கு, சனல் 4 மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். எந்தவொரு எதிர்கால விசாரணையும் சர்வதேச கண்காணிப்பாளர்களின் கீழ் செய்யப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்,” என்றும் அவர் கூறினார்.

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தைக் குறிப்பிட்டு, அனைத்து கத்தோலிக்கர்களையும் ஏழைகளுக்கு உணவு வழங்குமாறு ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். “எல்லா கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஏழைகளுக்கு உணவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஏழைகளுக்கு உணவு வழங்கி அவர்களுடன் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட உள்ளேன்,” என ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.

No comments