Vettri

Breaking News

இலங்கையிடம் மற்றுமொரு ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி கோரியுள்ள சீனா!!




இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வுக் கப்பலை பயன்படுத்துவதற்கு இலங்கையின் அனுமதியை சீனா கோரியுள்ளது.

இம்முறை சீனா Xiang Yang Hong 03 எனும் கப்பலை அனுப்பவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை இந்த ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளது. Xiang Yang Hong 03 கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சகத்திற்கு சொந்தமானது. Xiang Yang Hong 03 கப்பல் 99.06 மீற்றர் நீளம் கொண்ட பல்நோக்குக் கப்பலாகும்.

இதேவேளை, இந்தியாவின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த Shi Yan 6 கப்பல் நேற்று மீண்டும் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தானியங்கி அடையாள கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், Shi Yan 6 மீண்டும் நாட்டிற்கு வருகை தருவது குறித்து அமைச்சுக்கு அறிவிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. குறித்த கப்பல் தொடர்ந்தும் இந்து சமுத்திரத்தில் தரித்து நிற்கின்றது.

கடந்த சில வருடங்களில் 17-க்கும் மேற்பட்ட சீன உயர் தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்கு வருகை தந்துள்ளன.

இதேவேளை, சீன ஜனாதிபதி Xi Jinping-இன் சிறப்பு தூதுவரும் மாநிலங்களவை உறுப்பினருமான Shen Yiqin எதிர்வரும் 18 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவிற்கு விஜயம் செய்துள்ள சீன ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர், புதிய ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் (Mohamed Muizzu) பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளார்.


 

No comments