Vettri

Breaking News

நிலவைத் தொடர்ந்து சூரியனில் களமிறங்கத் துடிக்கும் இந்தியா




 




பல வருட கால கனவு திட்டமான நிலவு பயணம் வெற்றிப்பெற்றமையை அடுத்து சூரியனுக்கான தனது ஆய்வு பயணத்தை இந்தியா ஆரம்பித்துள்ளது. 

நிலவிற்காக சந்திராயன் 3 என்ற விண்கலத்தை இந்தியா நிலவுக்கு அனுப்பியது. இந்த  விண்கலகலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23 ஆம் திகதி நிலவின் தென்துருவத்தில் தரையங்கியது. 

எந்த ஒரு நாடும் கால்பதிக்காத நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்ததோடு அவ்விடத்திற்கு பிரதமர் மோடி சிவசக்தி என பெயரிட்டுள்ளார். 

இஸ்ரோவின் நிலவுத் திட்டமான சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் அடுத்த கனவுத் திட்டமான சூரிய திட்டத்தை செயல்படுத்தும் பணியில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவுள்ள இந்திய ஆய்வகமான ஆதித்யா-எல்1, செப்டம்பர் 2-ம் திகதி  விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகமான ஆதித்யா-எல்1, எதிர்வரும்  செப்டம்பர் மாதம்  ஆம் திகதியன்று 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.  

சூரியன் - பூமி அமைப்பில் சுமார் 15 இலட்சம் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1 (எல் 1) ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் ஆய்வகம் வைக்கப்படும் என்றும், இந்த புள்ளியை விண்கலம் அடைய 120 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தடையின்றி தொடர்ந்து சூரியனைப் பார்க்கும் வகையில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதால், அது சூரியன் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும் என்றும்  எதரிவித்துள்ளது.

மேலும், "எல் 1 புள்ளியைச் சுற்றியுள்ள ஒளிவட்ட சுற்றுப்பாதையில் ஆய்வகம் வைக்கப்படுவதால் எந்த தடையும் இல்லாமல் சூரியனைத் தொடர்ந்து பார்க்கும் முக்கிய நன்மை கிடைக்கும். சூரியனின் செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலை ஆகியவை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். 

சூரியனின் வெளிப்புற அடுக்குகளை கண்காணிக்க ஏழு பேலோடுகளை விண்கலம் சுமந்து செல்கிறது. நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கும். மீதமுள்ள மூன்று பேலோடுகள், லாக்ரேஞ்ச் புள்ளி L1 இல் உள்ள துகள்கள் மற்றும் புலங்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனின் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்ய இதில் விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer), சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் ஏற்படும் டைனமிக் மாற்றங்களை ஆராயும் ஹெல் 10எஸ் ( High Energy L1 Orbiting X-ray Spectrometer), கிரகங்களுக்கு இடையேயான காந்த புலதன்மையை அளவிடும் மேக்னோ மீற்றர் என்ற 7 முக்கிய கருவிகள் உள்ளன.

ஆதித்யா-எல்1 ஆய்வுத் திட்டத்தின் முழுப் பணிகளும், உள்நாட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படுகிறது. ஆதித்யா செயற்கைக்கோள் தற்போது ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை பிஎஸ்எல்வி- எக்ஸ்எல் (சி57) என்ற ரொக்கெட் மூலம், செப்டம்பர் 2-ஆம் திகதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஆதித்யா-எல்1 திட்டம் மூலம் சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களையும் கண்டறிய முடியும்.

சந்திராயன் 4 திட்டம் ஐப்பானுடன் இணைந்து மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எதிர் வரும் காலங்களில் இது செயலுக்கு வரக்கூடும். இவ்வாறு இந்தியா தொடர்ந்து விண்வெளித்துறையில் தன் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

No comments