Vettri

Breaking News

தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபவனி : இன்று மாத்தளை நோக்கி பயணிக்கும் பேரணி!




 மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவில் இடம்பெறும் தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சிப் பயணத்தின் இறுதி நாளான இன்று சனிக்கிழமை (12) நாலந்தாவில் ஆரம்பமான நடைபவனி பயண இலக்கான  மாத்தளையை நோக்கி செல்கிறது. 

இன்று காலை 5 மணிக்கு இப்பேரணியினர் தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். 

'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' என்கிற தொனிப்பொருளில் இந்த நடைபவனி நிகழ்வு கடந்த ஜூலை 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை தலைமன்னாரில் ஆரம்பமானது. 

தலைமன்னார் புனித லோரன்ஸ் தேவாலயத்தில் கலை நிகழ்வுகள் மற்றும் நினைவுத்தூபி அஞ்சலி இடம்பெற்றதோடு, மறுநாள் 29ஆம் திகதி சனிக்கிழமை தேவாலய வளாகத்தில் நடைபவனி புறப்பட தொடங்கியது. 

இந்த 16 நாள் நடைபவனி நிகழ்வில் பல பிரதேசங்களின் வழியாக மலையக மக்கள் பேரணியினர் பயணித்தனர். அவர்கள் செல்கிற இடங்களில் அந்தந்த பகுதிகளி வசிக்கும் மக்கள் மலையக மக்களின் நடைபவனிக்கும் அவர்களது கோரிக்கைகளுக்கும் முழு ஆதரவினை வழங்கியிருந்தனர். 

சர்வ மத தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் அந்தந்த பிரதேசங்களில் இயங்கும் பல அமைப்புகளும் பொது மக்களும் மலையக பேரணியினரை வரவேற்று உபசரித்து ஒத்துழைத்திருந்தனர். பலர் இந்த நடைபவனியில் இணைந்து நடந்தனர். பல இடங்களில் வெவ்வேறு அணியினர் போராட்டங்களையும் தனித்தனியான ஊர்வலங்களையும் நடத்தியிருந்தனர். 

இவ்வாறு தொடர்ந்த 'மலையகம் 200' நடைபவனி, இன்றைய தினம் பயணத்தின் இறுதி நாளை (16ஆம் நாள்) தொட்டிருக்கிறது. 

இன்று பகல் வேளையில் இப்பேரணி மாத்தளையை அடைந்த பின்னர், அங்கே பயணத்தின் இலக்கு, கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments