Vettri

Breaking News

மதுபான போத்தல்களில் போலியான ஸ்டிக்கர்கள் குறித்து விசேட வலியுறுத்தல்.





 மதுபானப் போத்தல்களில் ஒட்டப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர்களில் போலியானவற்றை வாடிக்கையாளர்களும், இலங்கை மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகளும் இலகுவில் அடையாளம் காணும் வகையில் தற்பொழுதுள்ள கையடக்கத்தொலைபேசி செயலியை மேம்படுத்துமாறு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிகரணவக, பாதுகாப்பு ஸ்டிக்கர் தயாரிப்பு நிறுவனத்துக்குப் பணிப்புரை விடுத்தார்.


கடந்த 24ஆம் திகதி மதுவரித் திணைக்களத்துக்கு கள விஜயத்தை மேற்கொண்டிருந்த இக்குழு, தற்பொழுது சந்தையில் உள்ள மதுபானப் போத்தல்களில் ஒட்டுப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் போலியானவையா அல்லது உண்மையானவையா என்பதைக் கண்டறிவதற்கு உரிய பொறிமுறை இல்லாமை குறித்து சுட்டிக்காட்டியிருந்தது.


இது குறித்து மேலும் விசாரிக்கும் நோக்கில் வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாட்டலி சம்பிகரணவக்க தலைமையில் நேற்று (10) பாராளுமன்றத்தில் கூடியது.


இக்குழு முன்னிலையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகளும், பாதுகாப்பு ஸ்டிக்கர் தயாரிப்பு நிறுவனத்தின் பிரதிநிதியும் அழைக்கப்பட்டிருந்தனர்.


இதன்போதே மேற்கண்ட பணிப்புரை வழங்கப்பட்டது

No comments