யாழ்ப்பாணத்தில் அடையாளம் தெரியாத நபர்களின் அராஜகம்! ஒருவர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியிலுள்ள வீடு ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.தாக்குதலின் பின்னர் வீட்டிலிருந்த பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
முகத்தை கறுப்பு துணியால் கட்டி வந்த நால்வர் அத்துமீறி வீட்டினுள் பிரவேசித்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததுடன், குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி, சமையலறை உபகரணங்கள், மற்றும் தளபாடங்கள் என்பவற்றை அடித்து நொறுக்கி சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.
அத்துடன் வீட்டிலிருந்த இரண்டு உந்துருளிகளை தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.இது குறித்து காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தடயவியல் காவல்துறையினர் இன்று ஆய்வுசெய்தனர்.
வீட்டிலிருந்த 20 வயது இளைஞன் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய் காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments